செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008

வாழ்த்துக்கள்

நண்பா உனக்கு நாளை பிறந்த நாள் !

அது வரை நான் உயிரோடு இருப்பேனா என்பதே
எனக்கு சந்தேகம் தான்,
இக்கடிதம் உன் கையில் கிடைக்கும் போது
நீ எனது உடலை வாங்க விரைந்துகொண்டிருப்பாய் . . .

ஆம் !
நான் மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறேன் !
அதில் எனக்கு துளியும் வருத்தமில்லை என் நண்பா !
ஆனால் என்ன
என்னால் உன்னைக்காண முடியவில்லையே
என்ற வருத்தம் மட்டும் தான் !

நீயும் நானும் தான் ஒன்றாக முயற்சித்தோம்
நமது பாரதத்தின் ராணுவத்தில் பணியாற்ற -
ஆனால், நீ ஒரே மகனாகப் போய் விட்டதால்
நாட்டை விட உன் வீட்டைக் காக்கும் பொறுப்பு உனக்கு !
உனக்கும் சேர்த்துதானேடா இந்த இடத்திற்கு நான் வந்தேன் !
எப்படியடா உனக்கு நன்றி சொல்ல?
இப்படியொரு வாய்ப்பை நீ வழங்கியதற்கு

நமது பால்ய நினைவுகள் அனைத்தும்
என் கண் முன்னே ஓடி மறைகிறது இப்போது !
அனைத்து நிகழ்வுகளும் ஆனந்தமாகவே இருந்திருக்கிறது !
எத்தனை கனவுகள் !
எத்தனை ஆசைகள் !
கனவுகள் உயிர்ப்பிக்கும் வேளையில்
எனக்கு இப்படி ஒரு பாக்கியம்
தேசத்திற்காக வேறு உலகம் செல்கிறேன் !

ஆறு மணி நேரத்திற்கு முன்
எதிரி என் இடுப்பில் சுட்டது கூட நினைவில்லை
எனக்கு இப்போது !
ஆனால்,
ஆறு மாதத்திற்கு முன்னால்
உன் மழலை பேசிய மொழி,
இன்னும் ஒலிக்கிறதடா என் காதுகளில் !

எனது அம்மா அப்பாவை நீதானடா பார்த்துக்கொள்ள வேண்டும்
இப்படிக்கேட்கக் கூடாது என்று தானடா நான் நினைத்தேன் !
கேட்பது நட்பிற்கு இழுக்கு என்று நினைப்பவர்கள் நாம் !
ஆனாலும் மனது கேட்கவில்லை,

முக்கியமான ஒன்று !
உனக்கு நன்றாகவே தெரியும்
என் அத்தை மகளைப் பற்றி,
அவளுக்கு ஆறுதல் கூற யாராலும் முடியாது
உன்னைத் தவிர !

நாட்டைக் காப்பதற்காக உயிரை விடுவது
எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது தெரியுமா ?

எல்லாம் நீ கொடுத்த வரம் !
எப்போதும் உனக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேனடா நான் !

எனக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்
அப்போதும் நீ என் நண்பனாக கிடைத்திட
வரம் வேண்டுகிறேனடா
இருப்பது தெரியாத கடவுளிடம் !
என் ஆயுளையும் சேர்த்து
நீ வாழ பிரார்த்திக்கிறேன் அவரிடமே !

பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் நண்பா!

கருத்துகள் இல்லை: